இது பிரபஞ்சம் பற்றிய
கதையென்றால் பொருத்தமா?
அல்லது நம்மைப் பற்றிய
கதை என்றால் பிழையா?.
முன்னதோர் காலம்
ஐநூறு கோடி ஆண்டுகள்,
வெடிப்புற்றது ஓர்மேகத்திரள்.
அதன் பெயர் நெபுலா.
வெடித்துக் கிளம்பிய
துகளின் பெருந்துண்டு
சூரியனாய் சிருஷ்டியாக,
கோள்களாகி குறுகின மற்றவை.
தீக்குழம்பால் முலாம் பூசி
உஷ்ணித்துக்கு கிடந்த
துகளுருண்டைதான் இவ்வுலகு.
அதன் தீக்குழம்பை
ஆற்றிய நீர் ஆழ் கடலானது.
கல் தோன்றி காற்று வீச
உயிர் பிறந்தது.
காற்று ஆட ஒலி தோன்றிற்று.
வரலாற்றின் சதிப்படி
நான் பிறந்தேன்.
இயற்கையின் விதிப்படி
நீ பிறந்தாய்.
இசைக்கென வாழும் நான்
உன் சுவாசத்தில் தாளம் தேடுகிறேன்.
இப்போது சொல்,
நீ யார்? நான் யார்?…
இக்கதை பிரபஞ்சம் பற்றியதா?
நம்மைப் பற்றியதா?
- வேல் லவன்