ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிய போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்து சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
பொருளாதார நெருக்கடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அதில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் பெயர்களை உச்சரித்தார்.
பொருளாதாரப் பாதிப்புக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 27/2 கீழ் எழுப்பிய கேள்விக்கு ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரைச் சுற்றிவளைத்த ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் கைகளிலிருந்த ஆவணத்தையும் பறித்துச் சென்றுள்ளதுடன் அவரைப் பேச விடாது ஒலிவாங்கியைப் பறித்து இடையூறுகளை ஏற்படுத்தினர்.
இதையடுத்து நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இதேவேளை, தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து ஆளும் தரப்பினர் சபை நடுவில் வந்து எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆளும் தரப்பினரது செயற்பாடுகளைப் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற அமளிதுமளியால் கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அமளிதுமளியையடுத்து சபை நடவடிக்கை கூடியபோது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் உரையை இடைமறித்த சனத் நிஷாந்த உள்ளிட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.