சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் வகையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் இருமடங்காக உயர்த்தியுள்ளது.
இந்திய மதிப்பில் ரூ.40,000 ஆக இருந்த மாணவர் விசா கட்டணத்தை உயர்த்தி 89,000 ரூபாய் ஆக பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான ஆஸ்திரேலிய அரசு உயர்த்தியுள்ளது.
மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது வரையில் 710 ஆஸ்திரேலிய டொலராக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 1,600 ஆஸ்திரேலிய டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்துள்ளவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விசா விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் வரை ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 சதவீதம் உயர்ந்து 5,48,800 பேரை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.