நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாங்களும் முடியுமான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கிறோம். அத்துடன் நீதிமன்றத்தினுள் இடம்பெற்றுள்ள துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை முன்வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.நாளாந்தம் மனித படுகொலைகள் இடம்பெறுகின்றன. சிறிய குழந்தைகளும் கொல்லப்படுகின்றன.அதனால் சட்டம் ஒழுங்கு தொடர்பில் உறுதியான தீர்மானம் ஒன்று தேவை.
அதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் நாட்டின் சட்டத்தை மதிக்கின்ற ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்களும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்.
புதுக்கடை நிதிமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தின் மூலம் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது என்றால் நாட்டின் நிலை என்ன? யாராவது மரண அச்சுறுத்தலுடன்தான் நீதிமன்றத்துக்கும் செல்வதாக இருந்தால் அது பாரிய பிரச்சினை.இந்த நிலை சமூகத்தில் வேறு இடங்களிலும் இடம்பெறுமாக இருந்தால் அது பாரிய பிரச்சினையாகும்.
அதனால் அரசாங்கம் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பலமான திர்மானங்களை எடுக்க வேண்டும். இந்த சமூகத்தில் கொலை கொள்ளை மோசடி இடம்பெற முடியாது.
அதனால் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் பலமான தீர்மானங்களுக்கு எங்களால் வழங்க முடியமான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
இந்த காலப்பகுதியில் பாரியளவில் மனித படுகொலைகள் இடம்பெற்றிருப்பதை நாங்கள் சுட்டிக்காட்டி இருந்தோம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை என்றே வெளிப்படையில் தெரிகிறது.
எனவே இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.