செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஏப்ரலில் இலங்கை வரும் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு

ஏப்ரலில் இலங்கை வரும் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு

1 minutes read

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. சுமார் ஒரு வாரகாலம் இலங்கையில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு கலந்துரையாட உள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள திருத்தங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழுவுக்கு அரசாங்கம் வழங்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டது. இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மற்றும் நல்லாட்சி கொள்கைகளை உள்ளடக்கிய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு கொழும்பு சந்திப்புகளில் அவதானம் செலுத்த உள்ளது.

மேலும் மனித உரிமை  செயல்பாட்டாளர்கள், சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து அறியும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகளை சந்தித்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள உள்ளது. மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகளை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி கண்காணிப்புக் குழு இலங்கை விஜயத்தின் போது கூடுதல் அவதானம் செலுத்த உள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து  கூடுதல் அவதானம் செலுத்தப்பட உள்ளதுடன், 2017 ஆம் ஆண்டில் இலங்கையை ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தில் மீண்டும் இணைப்பதில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் திருத்தம் ஒரு முக்கிய உறுதிமொழியாக இருந்தது. இவ்வாறானதொரு நிலையில் பாகுபாடு காட்டாமை, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் உரிமைகளுக்கும் மரியாதை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பயன்படுத்துவதில் உள்ள தடைகள் போன்ற விடயங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்கும் போது, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என நான்கு துறைகளில் 27 நிபந்தனைகளை முன்வைக்கும். இலங்கைக்கு தொடரச்சியாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம்   வழங்க வேண்டுமாயின் இந்த 27 நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தம் உட்பட உறுதிமொழிகளை நிறைவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More