“அநுர அரசு வாக்குகளுக்காகக் கண்டபடி பொய் சொல்லி வருகின்றது. தமிழர்களின் இடங்களில் தமிழர்கள் ஆளவேண்டும். தமிழர்களின் இடங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் சிங்களக் கட்சிகள் ஆட்சியமைக்க ஒருபோதும் அனுமதியளிக்கக்கூடாது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். வடமராட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“பொது எதிரியாக நாங்கள் தேசிய மக்கள் சக்தியைப் பார்க்கின்றோம். எமது மண்ணில் சிங்களத் தரப்புகள் ஆட்சி செய்யக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பாடம் புகட்டுவோம் என்று சொல்பவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். மே 7 ஆம் திகதி எனக்குத் தொலைபேசி எடுத்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வென்றுவிட்டது என்ற தகவலைச் சொல்லுங்கள்.” – என்றார்.