ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிக்கு வெளியில் எவ்விதமான செயற்பாடுகளையோ, கருத்துக்களையோ வெளிப்படுத்தக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறி சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கான மாபெரும் மக்கள் ஆதரவுக் கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி குருநாகலில் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அவரது ஆதரவு அணியினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த புதன்கிழமையன்று இரவு அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இராப்போசன விருந்துபசாரத்துடன் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ,கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசீம், முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது பலவிடயங்கள் பேசப்பட்டதோடு, அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சந்தர்ப்பத்தை வழங்குவது குறித்து அடுத்த மக்கள் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி குருநாகலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அடுத்தகட்டமாக மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதோடு ,அசோக அபேசிங்கவிடம் அதற்கான பொறுப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அலரிமாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை வரவழைத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரையில், ஒருநபரை ஆதரித்து பொதுவெளியில் கூட்டங்களை நடத்தக்கூடாது, கட்சியின் உறுப்பினர்களை அழைத்து இரகசிய சந்திப்புக்களை நடத்தக்கூடாது, குறித்த நபருக்கு ஆதரவளிக்குமாறு பிற அரசியல் கட்சிகளுடன் இரகசிய பேச்சுக்களை நடத்தக்கூடாது, மாவட்ட ரீதியான மக்கள் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர் பாராளுமன்ற குழுவினதும், மத்திய செயற்குழுவினதும் அங்கீகாரத்துடனும் முன்மொழியப்படும் எனவும் அடுத்த கூட்டத்தினை எதிர்வரும் ஆறாம் திகதி கூட்டுவதற்கும் இதன்போது ஜனநாயக தேசிய முன்னணியின் இறுதி வரைவினை ஆராய முடியும் என்றும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களிடத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக அறிய முடிகின்றது.
மேற்படி பிரதமரின் உத்தரவுகளுடன், ஏற்கனவே சுஜீவ சேரசிங்க மற்றும் அஜித் பீ பெரேராவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையிலும், அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு பிரதமர் நேரடியாகவே எச்சரித்திருந்த நிலையிலும் சஜித்தை ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதற்காக எதிர்வரும் ஐந்தாம் திகதி குருநாகலில் நடத்துவதற்கு திட்டமிட்ட மாபெரும் மக்கள் கூட்டத்தினை ஒத்திவைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கட்சித்தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுகளையும், எச்சரிக்கைகளையும் கடந்து திட்டமிட்டபடி குருநாகலில் சஜித் ஆதரவு மக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த மக்கள் கூட்டத்தின் ஏற்பாட்டாளராக இருக்கும் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க கூறுகையில், ஐந்தாம் திகதி திட்டமிட்டபடி எமதுகட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஆதரவு மக்கள் கூட்டம் குருநாகலில் நடைபெறவுள்ளது. எமது கட்சியின் தலைவர் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியபோது சில உத்தரவுகளை பிறப்பித்ததாக அறிய முடிகின்றது.
எனினும் அதுபற்றி எமக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை. தற்போது பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த மக்கள் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, கபீர் ஹாசீம், ஹரீன் பெர்னாண்டோ, உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இக்கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி குருநாகல் நகரில் பிற்பகல் 2.30இற்கு மக்கள் பேரணியுடன் ஆரம்பமாகவுள்ளது என்றார்.