விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ரொக்கட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகைள் வழங்கப்படும்.
ஏற்கனவே இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டு ஏவுகணை தளங்கள் உள்ளன. தனியார் நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தால் அவர்கள் அதற்காக இஸ்ரோவின் சொத்துக்களை பயன்படுத்திகொள்ள விண்ணப்பிக்கலாம்.
தனியார் துறையின் தேவைகளின் அடிப்படையில் விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான செயல்முறையை ஆரம்பிக்க விரும்புகிறோம். இதன் மூலம் அவர்களின் தேவைகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இஸ்ரோவின் மையங்களில் ஒன்றான திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயற்கைகோள் ஏவுதலை மேற்கொள்வது கடினம். அடுத்து வரும் மாதங்களில் நிலைமையை பொறுத்து செயற்கைகோள்கள் ஏவப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.