இலங்கை சுயாதீனமான நாடு என்ற ரீதியில் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியுமே தவிர உத்தரவிட முடியாது என இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அமைச்சர் சரத்வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய சொத்துக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு இடமளிக்கப்படாது.
ஆகவே தேசிய சொத்துக்கள் ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்யப்படுவதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மேலும், தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராகவே அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வற்புறுத்துவதற்கு இந்தியாவுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. இலங்கை சுயாதீனமான நாடு என்ற ரீதியில் இந்தியா இலங்கைக்கு யோசனை திட்டங்களை மாத்திரமே முன்வைக்க முடியும்
அதற்கு மாறாக இலங்கைக்கு எந்ததொரு விடயத்திலும் உத்தரவிட முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.