கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விழா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், தற்போது ஏப்ரல் 25 ஆம் திகதிக்குத் தள்ளி வைத்துள்ளனர். விருது தேர்வுக்கான படங்களை சமர்பிக்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மூன்று முறை மட்டுமே ஆஸ்கர் விழா தள்ளி வைக்கப்பட்டது. 1938-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் வெள்ளத்தின் போதும்,1968-ல் மாட்டின் லூத்தர் கிங் கொல்லப்பட்டபோதும், 1981-ல் அதிபர் ரொலாண்ட் ரீகனை கொல்ல நடந்த முயற்சியின்போதும் மட்டுமே ஆஸ்கர் விழா ஒத்தி வைக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஆஸ்கர் விழா நேரடியாக நடக்குமா அல்லது ஆன்லைனில் நடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.
அதே போல, பிரிட்டிஷ் திரைப்பட விருது விழாவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு (2020) வெளிவர இருந்த பல திரைப்படங்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிவரவில்லை.