ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டேன்லி அவரது 58 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலமானார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தை இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அந்தப் படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தனுஷை வைத்து ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தை இயக்கினார். தொடர்ந்து ஸ்ரீகாந்தின் ‘மெர்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இயக்குநராக இருந்த ஸ்டான்லி நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஞான.ராஜசேகரன் இயக்கிய ‘ பெரியார் ‘ படத்தில் அறிஞர் அண்ணாவாக நடித்து கவனம் பெற்றார்.
தொடர்ந்து ‘ராவணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சர்கார்’, ‘பொம்மை நாயகி’ என பல படங்களில் நடித்தார்.
ஆண்டவன் கட்டளை படத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பவராக அவர் வந்து செல்லும் காட்சிகள் வரவேற்பைப் பெற்றது.
இறுதியாக விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார்.
அவரது உடல் இன்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படும் எனத் தெரிகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.