இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை (09) காலை விபத்திற்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப்படையின் 7ஆவது படைப்பிரிவால் இயக்கப்படும் பெல் 212 ஹெலிகாப்டரே, மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படை பயிற்சி நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
முதற்கட்ட தகவலின்படி, அந்த நேரத்தில் ஹெலிகாப்டரில் இரண்டு விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை விமானப்படை மற்றும் இராணுவ சிறப்புப் படை (SF) உறுப்பினர்கள் உட்பட 12 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் ஆறு பேர் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், சம்பவம் குறித்து விசாரிக்க இலங்கை விமானப்படைத் தளபதி, 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.