●
எங்கள் கெபிகளை
என்றும் சிலந்திகள் கூட வலை நெய்து
அடைக்கப் போவதில்லை
நீர்க்கால்கள் எம் மண்ணை
பிரித்துப் பார்க்கப் பழகி
ஆண்டுகளாகிவிட்டன
ரத்தம் வழிந்தோடும் இடமெல்லாம்
யுத்தம் என்ற முழக்கம்
எங்கள் குரல்வளையில்
குடியேறிவிட்டன
அகரமும் இகரமும் ழகரமும்
எங்கள் மொழியழகு
நீ எழுதிப் பழகவே யுகம் வேண்டும்
தமிழினத்தின் ஆன்ம எழில்
ஆயுதத்தால் சாகாது
உங்களால் எங்கள்
ஆயுத எழுத்தைக் கூட அழிக்க இயலாது
நதிகள் கொந்தளித்துச்
சிங்களத் தீவுகள் நகர்ந்து வந்தாலும்
பயப்படத் தமிழன்
புல்லுக்குப் பூவாய் பிறக்கவில்லை
வீசிய குண்டுகளால்
குடல் நடுச்சாலையில்
சிதறிய பின்னும்
நாங்கள் நக்கிப் பிழைக்கவில்லை
உணவோடு ரத்தமும் தண்ணீருமாய்
பிசைந்து தின்று திரியும் விரல்கள்
சுதந்திர காலம் வரை துடிக்கும்
பூனையின் காலில் அகப்பட்ட
ஓணாணின் தவிப்பாய்
எத்தனை ஆண்டுகள்
எம்மக்களுக்கு
விளையாட உயிர்
அள்ளி இறைக்க தமிழச்சிகளின்
அங்கம்
மிதியடிகளாய்ச் சிதறிய பிடரிகள்
காறித் துப்ப கருவறை வழிகள்
சிங்களச் சிறுவனுக்கும்
சுட்டுப் பழக தமிழர் நெஞ்சு
உங்கள் ஆயிரம் சிப்பாய்கள்
ஒரு தமிழனின்
அரைஞான் கயிறு
எம் இனம் எழுந்தால்
சிங்களத் தீவினிற்குப் பாலம் இராது
மண் மனிதர்களுக்குத்தான்
முதலில் என
ரத்தம் கேட்கும் காளிகளின் நாக்குகளை
அறுத்தெறிந்து
கடவுள்களையே தள்ளி வைத்தோம்
எம் மண்ணை பிச்சை கேட்கும்
இனத்திற்கு
வரலாறு எழுதும் வரை
வைகை ஆற்றங்கரையில்
குடைபிடித்துக் கொண்டு
நிற்க மாட்டோம்
மலை முகடுகள் மேலே
பருந்துகள் பறந்தால் கூட
மரணமா தோழா என பதைக்கும்
எம் மக்கள்
இனவிடுதலை கொடியை
அண்ணாந்து பார்க்கும் நாள் வரும்
எங்கள் கெபிகளை என்றும்
சிலந்திகள் கூட வலை நெய்து
அடைக்கப்போவதில்லை
போராளிகள் புதைக்கப்படும்
இடத்திலிருந்து
வெறும் காலடித் தடங்கள் புறப்படுவதில்லை
•
தேன்மொழி தாஸ் – 2007