செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் துக்கத்தை மடைமாற்ற விவேக் இல்லை | மனுஷ்ய புத்திரன் கவிதை

துக்கத்தை மடைமாற்ற விவேக் இல்லை | மனுஷ்ய புத்திரன் கவிதை

1 minutes read

தடுப்பூசியால்
இலட்சத்தில் ஒருவருக்கு
இப்படி நடக்கலாம் என்கிறார்கள்

நமக்குத் தெரியாது
என்ன நடந்தது என்று

ஆனால் இலட்சத்தில் ஒருவனுக்கு
அப்படி நடக்கக் கூடாது

விவேக் இறந்துவிட்டார்
சாப்ளின் இறப்பார் என்று
யாரும் எப்படி நம்பவில்லையோ
அதே நம்பமுடியாத வழியில்
விவேக்கும் இறக்கிறார்

மோனாலிசாவின் மர்மபுன்னகை
இரண்டாம் முறையாக உறைகிறது

ஒரு பாடகன் இறக்கிறான்
அக்கணம் எப்போதையும்விட
அவனது சங்கீதம் உரத்து ஒலிக்கிறது
ஒரு நகைச்சுவை நடிகன் இறக்கிறான்
அவனைச் சுற்றியிருந்த
எல்லாச் சிரிப்பும் ஒடுங்கிவிடுகிறது

ஒரு நகைச்சுவை நடிகன் இறக்கும்போது
அவனைப்பற்றிச் சொல்ல எதுவுமில்லை
ஆனால் என்னைப்பற்றிச் சொல்ல
ஏராளம் இருக்கிறது

நான் ஒரு அவமானத்தில்
தலைகுனிந்து வெளியேறும்போது
அவன் ஒரு நகல் ரவுடியாக
மீசையை முறுக்கும் காட்சி
நினைவுக்கு வந்ததும்
வாய்விட்டு சிரித்து விட்டேன்

நான் கைவிடப்பட்ட ஒரு துயரத்தில்
என் தற்கொலைப்பாதையில்
நடந்துகொண்டிருக்கும்போது
ஒரு நவநாகரிக இளைஞனாக
அவன் பேசும் ஆங்கிலம் நினைவுக்கு வந்ததும்
புன்னகையுடன் திரும்பிவந்துவிட்டேன்

வாழ்க்கையின் சிக்கலான
புதிர்வட்டப்பாதையில்
நான் சுழன்றுகொண்டிருந்த நாளில்
அவன் ஒரு ட்ராஃபிக் போலீஸ்காரனுக்கு
எட்டுப் போட்டுக் காட்டும் காட்சியில்
என மனம் இலகுவாகிவிட்டது

அழவைப்பதற்கு
ஆயிரம் பேர் இருக்கிறார்கள்
சிரிக்க வைப்பதற்கு
யாரோ சிலர்தான் இருக்கிறார்கள்

பார்த்துச் சிரிப்பதற்கான
அபத்தங்களுக்கு பஞ்சமேயில்லை
சிரிக்கக் கற்றுதருபவர்களில்
ஒருவன் இல்லாமல் போகிறான்

நமக்கு நிறைய
சிரிப்பு தேவைப்படும் காலத்தில்
ஒரு சிரிக்கவைப்பவன் இறக்கக்கூடாது
இவ்வளவு இருள் நிரம்பிய காலத்தில்
ஒரு விளக்கு அணைந்திருக்கக்கூடாது

என் கனவுகளில் வர ஸ்ரீதேவி இல்லை
என் காதில் ஒலிக்க எஸ்.பி.பி இல்லை
என் துக்கத்தை மடைமாற்ற விவேக் இல்லை

இப்படியே போனால்
இனி நான்
தனியாகத்தான்
சாகவேண்டும் போலிருக்கிறது

மனுஷ்ய புத்திரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More