செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் காத்திருப்பு | ஆதிலட்சுமி சிவகுமார்

காத்திருப்பு | ஆதிலட்சுமி சிவகுமார்

1 minutes read

காலையும் பிற்பகலும்
ஒழுங்கை கடந்து போகும்
பள்ளிச் சிறார்களை
எட்டியெட்டிப் பார்க்கிறது…..

மற்றைய வேளையெல்லாம்
செவிகளைத் திறந்துவைத்து
வாலையும் இறுக்கிக்கொண்டு
உறக்கம் போலக்கிடக்கிறது…..

பொட்டுக்குள்ளால் நுழையும்
பக்கத்துவீட்டு ஆட்டுக்குட்டி
பார்வையிலே பட்டாலும்
பேசாமல் படுத்திருக்கிறது…..

மரமேறும் அணிலையும்
வேலிஓணானையும் கூட
ஏறெடுத்தும் பார்க்குதில்லை
காதுக்குள் நுழையும் ஈக்களையும்
கணக்கில் எடுக்குதில்லை……

கடித்துக்குதறும் என்று
கண்டவர்கள் அச்சம்கொண்ட
குண்டன் இன்று குணம்மாறி
கொண்டான் ஒருகோலம்…..
நறுமணம்தரும் உணவுத்தட்டு
எறும்புகள் மொய்த்திருக்கும்
ஏனென்றும் கேட்பதில்லை
எட்டியும் பார்ப்பதில்லை……

படலையடியில் ஏதும்
மிதிவண்டி மணிகேட்டால்
தலைதூக்கிப் பார்த்துவிட்டு
தன்பாட்டில் படுத்துவிடும்……

சருகுக்குள் இருந்துவரும்
சாரையைக் கண்டால்கூட
சன்னதம் கொள்ளாமல்
சாப்பிணம்போல் கிடக்கிறது…….

எப்போதாவது எவராவது
அவன்பெயரை ஆரும்
உச்சரித்தால் போதும்
எழுந்துநின்று பார்க்கிறது…..

விரும்பி வளர்த்தவன்
விட்டுவிட்டுப் போனவன்
வரும்வரைக்கும் இது
வைத்திருக்குமாம் உயிரை……

உப்பிக்கிடந்த உருவழிந்து
ஒட்டிக்குடல் உடல்மலிந்து
கண்ணிரண்டும் வெளித்தள்ளி
கூன்விழுந்து குறுகினாலும்
காத்திருக்குமாம் அது.

ஆதிலட்சுமி சிவகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More