புறாவுக்கு
புலியின் நகங்கள் முளைத்ததோ?
பூக்களும்
ரத்தம் சிந்துதே.
அரிவாள்களும், தீவட்டிகளும்
ஆங்காரத்தோடும், ஆவேசத்தோடும்
தேசமெங்கும்
ஆர்பரித்து
அலைகின்றன.
மனிதக் குருதி ருசிக்க
நாக்கைச் சுழற்றியபடி
காலம்
கொக்கின் கவனத்தோடு
காத்திருக்கிறது.
அச்சுறுத்தும் வேதனையை
அறுத்துப் போடு..
துக்கம் விழுங்கித் தவிக்கும்
நரக வாழ்க்கை
வெடித்து நொறுங்கட்டும்…
பூ பூக்காத இருதயங்கள்
பொசுங்கிப் புகட்டும்…
காட்டு விலங்குகளின்
கண்களைப் போன்று
எரியும் ஆன்மாக்கள் யாவும்
பனி மழையில் நனையட்டும்.
வெட்டுக்கள் நிறைந்த முகங்கள் எல்லாம்
நிழல்களின் ஊஞ்சலில்
ஓய்வெடுத்து
ஆறுதலடையட்டும்.
அழகான
அமைதியான
ஆனந்த.
உலகை நிர்மாணிக்க…
வர்ணங்களற்ற
வண்ணத்துப்பூச்சிகள்
பறந்து வரும்..
மனசுகள் பூக்கும் நாள்
மிகு அருகில்.
வசந்ததீபன்