…..
விழிகளுக்குள் நேர் சேரும்
தூரத்து மரநிற
நாரையென
ஆழ்புலத்தில்
இறங்குகிறது,
குதித்த
சிறுவனின் தலைமயிரை பிடித்து
தூக்குவது போல
பனை மரத்தின் மீது கால்கள் நின்று
எம்பி மேல முன்னேறும் படியாக
கிணற்றில்
நிதம் முகம் பார்க்கும்
அவள்தான்
உருளையின் கயிறை
இழுக்கிறாள்
கன்னிகையின் நெஞ்சுக்கு நேரே
நிறைந்த நீர் அள்ளி
மேலே வருகிறது..
கிணறு சிறிதான ஏக்கத்தின் நீர்க் கண்ணாடியாகிறது
வாளியில்
தழும்பும்
நீர் அள்ளி அவளோ
இம்முறை முகம் கழுவுகிறாள்.
முகம் காணுதலில் சுகம்
நனைப்பதில் இருப்பதில்லை
என்றே
ஒரு நீர்வீழ்ச்சியின்
சரிதத்தை
உச்சி பொழுதின்
கண்களில் ஒளிர்ந்தது
அண்ணாந்த முகத்தை
நனைத்த
கிணற்று நீர்.
சீனு ராமசாமி