நெல்லிக்காய் துவர்ப்பு, புளிப்புச் சுவையுடன் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதில் உள்ள விட்டமின் C நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆனால் கடைகளில் விற்கப்படும் நெல்லிச்சாறில் தண்ணீரை கலப்பதுடன், அந்த பானம் கெட்டுப் போகாமல் இருக்க, அளவுக்கு அதிகமாக பென்சாயிக் ஆசிட் (Benzoic acid) மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) ஆகியவை சேர்க்கப்படுகிறது.
இந்த பானத்தைக் குடித்தால் மிக விரைவில் குடல், இரைப்பை புண் மற்றும் புற்றுநோய் ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது.
எனவே கடைகளில் நெல்லிக்காய் சாறு வாங்கி குடிப்பதை தவிர்த்து வீட்டிலே தாயாரித்து குடிப்பது மிக நல்லது.
நெல்லிக்காயை எப்படி சாப்பிடலாம்?
நெல்லிக்காயை வெறும் வாயில் சாப்பிடலாம் அல்லது சாறாக்கி குடிக்கலாம்.
இரண்டு நெல்லிக் காய்களை எடுத்து அதன் விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு அரைத்து 2 டீஸ்பூன் வெல்லம், 1 டீஸ்பூன் தேன், 1 சிட்டிகை உப்பு, 1/4 டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, குளிர வைத்து அருந்தலாம்.
விதை நீக்கிய 10 நெல்லிக்காய்களை எடுத்து, சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். அதில் தேவைக்கேற்ப தேன், இளநீர் சேர்த்துக் குடிக்கலாம்.
விதை நீக்கிய நெல்லிக்காய் மூன்று எடுத்துக் கொண்டு சிறு துண்டு தோல் நீக்கிய இஞ்சி, 1 கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அதில் எலுமிச்சைப் பழச்சாறு, தேன், சர்க்கரை கலந்து அருந்தலாம்.
நெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்
தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெற்று கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வராது.
பற்கள், ஈறுகள் பலம் பெறுவதுடன், வாய் துர்நாற்றம், ரத்தச் சோகை உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளை போக்குகிறது.
இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மறும் கொழுப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
காச நோய், அஜீரணம், வயிற்றுக் கோளாறு, வாய்வுக் கோளாறு குடல் வாய்வு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
நம் உடலுக்குச் சுறுசுறுப்பு தன்மையை அளித்து உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி கல்லீரலில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும், குடல் புண்களைக் குணப்படுத்தவும், உடல் சூடு குறைக்கவும், மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை நிறுத்தவும் உதவுகிறது.