செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தொற்று மூலம் பரவும் புற்று நோய்!

தொற்று மூலம் பரவும் புற்று நோய்!

2 minutes read

டைபாய்டு, மலேரியா போன்றவை தொற்று நோய்கள் தான். இது உண்மை. ஆனால் இவற்றால் புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதே நேரம் சில தொற்று நோய்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை.

‘ஹெலிகோபாக்டர் பைலோரி’ எனும் கிருமி காரணமாக இரைப்பை புண் ஏற்படுவதுதான், தற்காலத்தில் அதிகம். அசுத்தமான குடிநீரில் இவை வசிக்கும். அதனை அருந்துபவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது பல வருடங்களுக்கு இரைப்பையில் வாழும். இதற்கு சிகிச்சை எடுக்க தவறினால், நாளடைவில் இது இரைப்பை புற்றுநோயை தூண்டும். மற்றவர்களைவிட இந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு இரைப்பையில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். அடிக்கடி இரைப்பை புண் தொல்லை கொடுத்தால் ஒருமுறை ‘எண்டோஸ்கோப்பி’ பரிசோதனை செய்து, ‘ஹெலிகோபாக்டர் பைலோரி’ கிருமி இருக்கிறதா என்பதை உறுதி செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

ஹெப்படைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்கள் கல்லீரலை தாக்கும்போது முதலில் மஞ்சள் காமாலை ஏற்படும். இந்த நோய் கிருமி ரத்தம், தாய்ப்பால், விந்து, பெண் பிறப்புறுப்பு திரவங்களில் வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கர்ப்பிணிக்கு இந்த நோய் இருந்தால் குழந்தைக்கும் அது தொற்றுகிறது. பாலுறவு மூலம் இது மற்றவர்களுக்கு பரவும்.

இந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் செய்யும் போது,அந்தரத்தத்தை பெற்றுக்கொண்டவருக்கு இந்த நோய் வருகிறது. இது நாள்பட்ட கல்லீரல் அழற்சி நோயாக மாறி, பின்னர் புற்றுநோயாக உருவெடுக்கும். ஹெப்படைடிஸ் பி மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி உள்ளது. குழந்தை பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளாமல் இருந்தால், வளர்ந்த பிறகும் போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் இந்த புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

இதேபோல் ‘ஹெச்.பி.வி. பை வேலன்ட் தடுப்பூசி’யை பெண்கள் 10 வயது முடிந்ததும் முதல் தவணை போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து இரண்டாவது தவணை, ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையை போட்டுக்கொள்ள வேண்டும்.

‘ஹெச்.ஐ.வி.’ தொற்று காரணமாக எய்ட்ஸ் நோய் ஏற்படும். இந்த நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகவும் குறைந்து போவதால் தோல், நிணநீர் கணுக்கள், கல்லீரல், கருப்பை வாய் ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இவர்கள் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருந்து, இந்த வைரஸ் கிருமிகளுக்கு எதிரான மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டால், இந்தப் புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுத்துவிடலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More