எம்மில் சிலருக்கு பிறக்கும்போதே நுரையீரல் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தற்போது மூன்று வகையான நிவாரண சிகிச்சை மூலம் ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க இயலும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
தெற்காசிய நாடுகளில் பிறக்கும் 15,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள், சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
கடுமையான இருமல், சளியுடன் கூடிய இருமல், மூச்சுத் திணறல், மீண்டும் மீண்டும் தொடரும் சைனஸ் தொற்று, ஒவ்வாமைகள், இவற்றுடன் அஜீரணம், எடை குறைவு, சமச்சீரற்ற வளர்ச்சி, செரிமான மண்டல உறுப்புகளில் ஒழுங்கின்மை ,அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
நுரையீரல் பகுதியில் கட்டியாக சளி தங்கிவிடுவதால் சுவாச பிரச்சனை அதிகரிக்கிறது. மரபணு குறைபாட்டினால் ஏற்படும் இத்தகைய பிரச்சனைக்கு நுரையீரல் மட்டுமல்லாமல் கணையம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது.
சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் என்ற பாதிப்பிற்குள்ளான குழந்தைகளின் வியர்வை, சளி மற்றும் மல பரிசோதனைகளின் மூலம் இதன் பாதிப்பை உறுதிப்படுத்துவார்கள். Airway Clearance Therapy, Hypertanic Saline Nebulization, Chest Clapping ஆகிய சிகிச்சைகளை மேற்கொண்டு இத்தகைய பாதிப்புக்கு சிகிச்சை வழங்குவார்கள்.
வேறு சிலருக்கு நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை செய்து குணப்படுத்துவார்கள். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் குழந்தைகளுக்கு நெபுலைசர் வழங்கும் போது அதனை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். கணையம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாட்டை சீராக்குவதற்கும், கண்காணிப்பதற்கும் பிரத்யேக மருந்துகள் வழங்கப்படும். மருத்துவர்களின் அறிவுரைப்படி தொடர்ந்து மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
டொக்டர் தீபா செல்வி
தொகுப்பு அனுஷா.