இதய நோய் ஏற்பட்டதுடன் வாழ்க்கை முடிந்துவிட்டதென எண்ண வேண்டியதில்லை. அச்சத்தை விட்டுவிட்டு, நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.
சிலர் சிகிச்சைக்கு பிறகு இன்னும் பயத்தில் வாழ்கிறார்கள். இன்னும் சிலர் நெஞ்சு வலி சரியானவுடன் பழைய உணவுப் பழக்கங்களையும், பழைய வாழ்க்கையையும் தொடருகிறார்கள். இந்த இரு நிலையும் தவறு.
இதய பிரச்னைகள் இல்லாமல் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வந்துவிட்டாலும்கூட, சரியான பராமரிப்புடன், இயல்பான வாழ்க்கையை தொடரலாம். மருந்துகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், பயம் போன்றவை இல்லாமல் யோகா, தியானம், நடைப்பயிற்சி மூலம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
மீண்டும் மாரடைப்பு வராமல் பாதுகாப்பதே முக்கியம். உணவு கட்டுப்பாடும் அவசியம். உப்பும் கொழுப்பும் குறைவான உணவுகளை, சிறிய அளவில், இடைவெளியுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் அறிவுரையை எப்போதும் பின்பற்ற வேண்டும்.
பயணிக்க வேண்டியிருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்றுவிட்டு கிளம்ப வேண்டும். தேவையான மருந்துகள், பரிசோதனை முடிவுகள், டாக்டரின் எண் போன்றவை அருகில் இருக்கட்டும். வீட்டு முகவரி, அவசர எண்கள் போன்றவை எப்போதும் பக்கம் இருக்க வேண்டும்.
முக்கியமாக, “முடிந்துவிட்டது” என்ற எண்ணத்தை விடுங்கள். இது ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கம்!