கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் எவரும் பாதிக்கப்பட்டவில்லை என இலங்கை துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார்.
கொத்தணிக்குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்கு இலங்கை தலைமை வகிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகலாவிய ரீதியில் கொத்தணிக்குண்டு பாவனையினால் பொதுமக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக்குண்டு தொடர்பான உடன்படிக்கைக்கு இலங்கையே தலைமை வகிக்கின்றது.
அதனடிப்படையில் இலங்கை சமர்ப்பித்திருக்கும் அதன் முதலாவது அறிக்கையில் கொத்தணிக்குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என்றும், எனவே உதவிகள் எவையும் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
இது இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் உட்பட போர்களில் தப்பிய பலரின் வாக்குமூலங்களுக்கு எதிரானதாக உள்ளது.
குறிப்பாக போருக்குப் பின்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் கொத்தணிக் குண்டுகளின் எச்சங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களையும் அரசாங்கம் மறுக்கின்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.