ஹாங்காங் மற்றும் கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாகப் பொய்யான தகவல்களைப் பரப்பியதற்காக 1.7 லட்சத்துக்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகளை முடக்கியிருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ஹாங்காங்கில் சீன அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்துக் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கொரோனா ஊரடங்கு காரணத்தால் நிறுத்தப்பட்டது. இனிமேல் ஹாங்காங்கில் போராட்டம் நடைபெறக் கூடாது என்று சீன அரசு போராட்டக்காரர்களைக் குறிவைத்து தேசியப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்தது.
இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் தற்போது ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தைக் கலைக்கக் காவலர்களால் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், தடியடிகள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டத்துக்கு எதிராகச் சீன அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு டுவிட்டர் கணக்குகளிலிருந்து டுவிட்டுகள் குவிந்தன.
மேலும், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலுக்குச் சீனா தான் காரணம் என்று உலக நாடுகள் பல குற்றம் சுமத்தி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராகவும் பலர் கோவிட் 19 குறித்து டுவிட்டுகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்த டுவீட்டுக்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த டுவிட்டர் நிறுவனம், சுமார் 1.7 லட்சம் டுவிட்டர் கணக்குகளை முடக்கியிருக்கிறது.
“சீனாவுக்கு ஆதரவாகப் பதியப்பட்ட போலியான புவிசார் அரசியல் பதிவுகளை நீக்கி, அந்தக் கணக்குகளை டுவிட்டர் நிறுவனத்தின் பிரைவசி கொள்கைகளை மீறிய காரணத்துக்காக முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 23750 டுவிட்டர் கணக்குகள் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பதிவுகளைப் பகிர்ந்திருக்கின்றன. மற்ற கணக்குகள் இவற்றைப் பகிர்ந்த கணக்குகள் ஆகும். அனைத்து கணக்குகளையும் முடக்குகிறோம்” என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.