நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் கென்யா நாட்டை சேர்ந்த ஜோனாதன் ஜேக்கப் மீஜர் (வயது 41) என்பவர் பகுதி நேர வேலையாக விந்தணுக்களை தானம் வழங்கி வருகிறார்.
இதன்படி, அவர் 550 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ள நிலையில், அவரிடம் இருந்து பலன் பெற்ற நெதர்லாந்து நாட்டு பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.
ஈவா என்ற அந்த பெண், ஜேக்கப் 100 குழந்தைகளுக்கு மேல் தந்தையாகி விட்டார் என முன்பே அறிந்திருந்தால், அவரை ஒருபோதும் நான் தேர்வு செய்திருக்கவே மாட்டேன் என்றும், இதனால் தனது குழந்தைக்கு ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பார்த்தால் அச்சமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
நெதர்லாந்து நாட்டு சட்டத்தின்படி, ஒருவர் 12 பெண்களுக்கு இடையே 25 குழந்தைகளுக்கு அதிகமாக தந்தையாவதற்கு விந்தணு தானம் செய்ய முடியாது.
ஆனால், இந்த விதிகளை மீறியதற்காக, 25 குடும்பங்கள் சார்பில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவரின் செயலால் அதே ஊரில் நூற்றுக்கணக்கான சகோதரர், சகோதரிகள் உருவாகி உள்ளதுடன், அதனை அறியாமல் எதிர்காலத்தில் அவர்கள் திருமண உறவுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்த விடயம் தெரியவருகையில் அவ்வாறு உருவான குழந்தைகள் மனரீதியிலான பாதிப்புகளை எதிர்நோக்கக் கூடும் என, வழக்கு தாக்கல் செய்தவர்கள் கூறியுள்ளனர்.
வருங்காலத்தில் இதுபோன்ற விந்தணு தானம் செய்யாமல் அவரைத் தடுக்கும் வகையில் அங்குள்ள அறக்கட்டளையும் ஜேக்கப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளது.
உலகளாவிய அளவில் இணையதளம் வழியே பெரிய அளவிலான மற்றும் சர்வதேச விந்தணு வங்கிகளுடன் இணைந்து இந்த வர்த்தகத்தில் ஜேக்கப் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.