சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப்பை இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளார்.
சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதியால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டதோடு, சுமுகமான கலந்துரையாடியதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இரு தரப்புப் பேச்சில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு தொடர்புகளைப் பலப்படுத்திக்கொண்டு, முன்னோக்கிச் செல்வது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்தாலோசித்ததோடு, உணவுப் பாதுகாப்பு, மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உள்ளிட்ட துறைசார் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அதையடுத்து சிங்கப்பூர் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில்,
“எமது நட்புறவானது மனிதர்களின் அடிப்படையிலேயே வலுவாக நிலைத்து நிற்கும்.
அந்தத் தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கான பரந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் பலன்மிக்கதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையட்டும்” – என்று பதிவிட்டிருந்தார்.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது, இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அதேபோல், தெற்காசிய வலயத்தின் பொது பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றம் மற்றும் உரிய வகையிலான தொடர்பாடல்களை பேண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். வலயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ள இரு தரப்பும் அர்பணிக்க வேண்டும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டது.
அதன்பின்னர் சிங்கப்பூர் நிலைபேறு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயனையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் சந்தித்தார்.