செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக செல்வத்தைத் தெரிவு செய்யக் கோரிக்கை!

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக செல்வத்தைத் தெரிவு செய்யக் கோரிக்கை!

1 minutes read

“தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கும் (புளொட்) ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோருக்கு ரெலோவின் செயலாளர் நாயகம் தனித்தனியே கடிதங்களை இன்று அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“முதலாவதாக மறைந்த இரா.சம்பந்தன் ஐயாவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு, கடந்த 23 வருடங்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக எங்கள் எல்லோராலும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டு இரா.சம்பந்தன் ஐயா செயற்பட்டு வந்தார். தற்போது அவரது மறைவுக்குப் பின்பு புதிதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுள் கடந்த காலங்களில் பல உள்வீட்டுப் பிரச்சினைகள், மனவேதனைகள் வந்தபோதும் நாங்கள் நாடாளுமன்றத்தினுள் எமது மக்களின் தேவை, நன்மை கருதி ஒற்றுமையாகத்தான் செயற்பட்டு வந்தோம். அந்த அடிப்படையில் தொடர்ந்தும் ஒற்றுமையாக நாடாளுமன்றத்தினுள் செயற்பட விரும்புகின்றோம்.

எனவே, ஏற்பட்டுளள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கான வெற்றிடத்தை எல்லோருடைய சம்மதத்துடனும் நிரப்புவதற்கு விரும்புகின்றோம்.

நாடாளுமன்ற சிரேஷ்ட தன்மை மற்றும் நீண்டகாலமாக, தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே, 26 வருடங்களுக்கு மேலாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More