சுவிட்சர்லாந்தின் பெயனில் கடந்த நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் சுமேத ரணசிங்க வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
உலக மெய்வல்லுநர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் நடைபெற்ற Citius Meeting Bern 2022 சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றிய 31 வயதான சுமேத ரணசிங்க, 74.55 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
முன்னதாக கடந்த 11ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற அத்லெட்டிக் ஏஜ்னீவ் 2022 போட்டியில் பங்குகொண்ட அவர், 70.21 மீற்றர் தூரம் எறிந்து 4ஆவது இடத்தைப் பிடித்தார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கை சாதனைக்கு (83.04 மீற்றர்) சொந்தக்காரராகிய சுமேத ரணசிங்க, கடந்த ஏப்ரல் மாதம் தியகமவில் நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 82.16 மீற்றர் தூரத்தை எறிந்து தனது இரண்டாவது சிறந்த தூரத்தைப் பதிவு செய்தார்.
ஆனால், அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு அவர் பரிந்துரைக்கப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் 85.00 மீற்றர் தூரத்துக்கு தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
சுமேதவைத் தவிர மேலும் மூன்று வீரர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி Citius Meeting Bern 2022 சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றியிருந்தாலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.