*தியாவட்டவான் பாலைநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தின் அவல நிலைமை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு பூரணப்படுத்தப்பட்டாலும் அவை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத நிலையே காணப்படுகின்றது.
அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில், தியாவட்டவான் கிராம அதிகாரி பிரிவிலுள்ள பாலைநகர் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் விலங்குகளின் சரணாலயமாக காணப்படுவதாகவும், சமூக சீர்கேட்டு மையமாக விளங்குவதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு காலப் பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் நிதியில் கட்டப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் கடந்த சில வருட காலமாக முழுமையாக இயங்காத நிலையில் தற்போது சரணாலயமாக காணப்படுகின்றது.
அரசாங்கத்தினால் கிராமங்களுக்கு வழங்கப்படும் கட்டடங்கள் அரச திணைக்கங்களின் பார்வையின் கீழ் இயங்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். இதனை அரச திணைக்களங்கள் தொடர்ச்சியாக தங்களது மேற்பார்வையின் கீழ் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் சில திணைக்களங்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கட்டடங்களை கவனிப்பதே கிடையாது. இதன் காரணமாக பல கட்டடங்கள் செயலிழந்த நிலையில் காணப்படுகின்றன. அந்த வகையில் குறித்த கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் இயங்காத நிலையில் உள்ளது.
இங்கு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட தளபாடங்கள் உட்பட்ட பல பொருட்கள் காணாமல் போயுள்ளன. அலுமாரிகள் உடைந்த நிலையில் காணப்படுவதுடன், யன்னல்கள் கழற்றப்பட்டுள்ளன. இங்கு மாடுகளின் சாணம் மற்றும் வைக்கோல், பறவைகளின் எச்சங்கள் என்பன காணப்படுகின்றன. மின்சார சாதனங்கள் மறைந்துள்ளதுடன், வளாகம் முழுவதும் பற்றைக்காடாக காட்சி அளிக்கின்றது.
இரவு நேரங்களில் குறித்த கட்டடத்தை சிலர் சமூகவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த பகுதியில் கலாசார சீர்கேடுகள் இடம்பெறுவதற்கு இக்கட்டடம் வழிவகுப்பதாக மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
தற்போது இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான கட்டடங்கள் இயங்காத நிலையில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி காணப்படுவது நல்லதல்ல.
இவ்விடயம் தொடர்பில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரின் கவனத்துக்கு பல தடவைகள் தெரிவித்தும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தியாவட்டவான் வட்டார உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் தெரிவித்தார்.
பாலைநகர் கிராமத்தையும் அதனை அண்டியும் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களது அவசிய தேவைகளான குடும்பநல கிளினிக், பாலர் பாடசாலை, பல்தேவை கட்டடம், கிராம அபிவிருத்திச் சங்கம் என பல தேவைகளுக்கு கட்டடம் இல்லாத நிலையில் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். ஆனால் இங்கே ஒரு கட்டடம் பயன்பாடு இல்லாமல் கிடக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் உரிய அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி, மிக விரைவாக கட்டடத்தினை புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.