சுற்றுச் சூழல் மாசடைதலை தடுக்குமா ?
ஏழை நாடுகளை ஏமாற்றும் நாடகமா ?
தீர்க்கமான பிரகடனங்கள் சாத்தியமா ??
ஆக்கியோன் – ஐங்கரன் விக்கினேஸ்வரா
(காலநிலைமாற்ற COP 27 மாநாடு, அபிவிருத்திஅடையாத ஏழைநாடுகளை ஏமாற்றும் நாடகமா எனஊகிப்பதுடன், இக்கட்டுரை உலக சூழல் மாசடைதலை தடுக்கும் பிரகடனங்கள் இந்த மாநாட்டில் முன்மொழிந்ததாலும்- அதன் நடைமுறை சாத்தியத்தை ஆராய்கிறது)
காலநிலை மாற்றத்துக்கு காரணமான வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகள், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் வளர்ச்சி அடையாத, மூன்றாம்தர ஏழை நாடுகளை எவ்வாறு முன்னேற்றுவது என்பதே இம் மாநாட்டின் மிகப் பெரும் கருப்பொருளாகும். உலகில் காலநிலை மாற்றத்தைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின் 27ஆவது ஆண்டு மாநாடு எகிப்து நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏழைநாடுகளைஏமாற்றும்மாநாடா ?
காலநிலை மாற்ற சிக்கலால் நாள்தோறும் வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் பேரிடர் பிரச்னைகளை சந்தித்துவரும் நிலையில் இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே காலநிலை மாற்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்ட நிதியாதாரங்களை இதுவரை வழங்காத நிலையில் இம்மாநாட்டில் இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாநாட்டைப் போல் எடுக்கப்பட்ட முடிவுகளை அலட்சியப் போக்குடன் அணுகாமல் கண்டிப்பான முறையில் அமல்படுத்தினால்தான் இந்த பேரிடர் சிக்கலில் இருந்து எதிர்கால தலைமுறையை காப்பாற்ற முடியும் என்பதே காலநிலை மாற்றத்தைத் தடுக்கக் கோரும் சூழலியலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
வளர்ந்த நாடுகள் அதிக தொழிற்சாலைகளை ஏற்படுத்தி புவி வெப்பநிலை உயர்வுக்கு வித்திட்ட இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளின் இந்த அலட்சியப் போக்கால் வளரும் மற்றும் ஏழை நாடுகள் பாதிப்புகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றன.
புவி வெப்பமயமாதலினால் ஏற்படும் காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் காலநிலை மாற்ற மாநாடு ஏழை நாடுகளை ஏமாற்றும் மாநாடகவே கருதப்படுகிறது.
புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறுவது தொடங்கி புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது வரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
நெருக்கடிக்கான தற்போதய தருணத்தில் காலநிலை மாற்ற பிரச்சனையை சமாளிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பருவநிலை மாற்றத்தை கண்காணிக்கும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.இந்நிலையில், சர்வதேச பேச்சுவார்த்தைகளின் வேகம் மிகவும் மெதுவாக இருக்கிறது என்றும் பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.
ஐ.நாகாலநிலைமாநாடு:
ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் காலநிலை மாநாடு COP 27 (Conference of the Parties) உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 6 தொடங்கி நவம்பர் 18-ம் தேதி வரை எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்று வருகிறது.
காலநிலை பாதிப்பைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த நம்பிக்கைக்குரிய நடவடிக்கையும் உலக நாடுகளால் எடுக்கப்படவில்லை. காலநிலை மாற்ற பாதிப்புகள் தொடர்ந்து தீவிரமாக அதிகரித்து வருகின்றன.
காலநிலை மாற்றத்தால் உலகநாடுகள் பலவும் பருவநிலை பிறழ்வு, அதீத வெப்ப அலைகளின் தாக்கம், தீவிர மழைப்பொழிவு, அதன் காரணமாக ஏற்படும் வெள்ள பாதிப்பு, விவசாய அழிவு உள்ளிட்டவற்றை சந்தித்து வருகின்றன.
உலகநாட்டுதலைவர்கள்சந்திப்பு:
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பதால், மிக முக்கியமான மாநாடாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
இதுவரை 26 COP மாநாடுகள் நடைபெற்றுள்ளது. COP முதல் மாநாடு 1995-ம் ஆண்டு நடைபெற்றது. கடந்த மாநாடு கிளாஸ்கோவில் நடைபெற்றது. காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் ஐ.நா சார்பில் காலநிலை மாநாடு நடத்தப்படுகிறது.
வெப்ப அலை, கடல் மட்டம் உயர்வு, இயற்கைப் பேரிடர்கள், காற்று மாசு, பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல், புவி வெப்பநிலை உயர்வு என்று காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் விவாதம் நடத்த உள்ளனர். பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில்,
வளர்ச்சி அடைந்த நாடுகள் எவ்வளவு நிதியாதாரங்களை வழங்க உள்ளன என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடர் அழிவில் ஏழைநாடுகள் :
உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு வளையத்தை நாமே அழித்துக் கொள்கிறோம், நாம் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழலை நாமே அழித்துக் கொள்கிறோம் என்று அந்த சூழல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
முன்னேறிய பல நாடுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அவசியத்தை புரிந்து கொண்டுள்ளனர்.
ஆயினும் சுற்றுச்சூழல் பாதிப்பை கையாள முடியாத ஏழை நாடுகளுக்கு இந்த ஆபத்துகளை அபிவிருத்தி அடைந்த நாடுகளே ஏற்றுமதி செய்கின்றன. அவை விற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதில் அந்த ஆபத்துகளை எதிர்கொள்கின்றன. இதனால் தொடர் அழிவுகளை ஏழை நாடுகள் தான் எப்போதும் சந்திக்கின்றனர்.
இந்த வகையில் பூமியுடன் நமது உறவுகளை ஆய்வு செய்வதில் முக்கியமான ஆண்டுகளாக எதிர்காலம் எனி இருக்கப் போகிறது.
வரக்கூடிய தசாப்தங்களில் பத்து லட்சம் விலங்கு, பூச்சி மற்றும் தாவர இனங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன்்என்று கடந்த ஆண்டு வெளியான ஐ.நா அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதீதமான நகரங்களின் வளர்ச்சி, விவசாயத்துக்காக வனங்கள் அழிப்பு, உணவுக்காக மீன் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் முக்கால் பகுதி நிலம் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
COP 27 மாநாட்டின்விவாதம்:
COP 27 மாநாட்டில் ஐந்து முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளது. முக்கியமாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, காலநிலை மாற்ற திட்டங்களுக்கான நிதி ஆதாரம், காலநிலை மாற்றத்தை குறைப்பதில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை செயல்படுத்துதல் ஆகிய ஐந்து முக்கிய விடயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.
இம் மாநாட்டின் மிகப்பெரும் சர்ச்சையாக கோகோகோலா நிறுவனம் நன்கொடையாளராக இணைந்துள்ளது ஏற்கெனவே விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளும் உள்ள இந்த மாநாட்டின் இறுதியில்
காலநிலை மாற்றம் தொடர்பான பிரகடனங்களை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே.
இந்த மாநாட்டில் தொடர் கருத்தரங்கங்கள், விவாதங்கள் ஆகியவை இடம்பெற்று,
இறுதியிலும் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து நாடுகளும் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பிரகடனத்தில் கூறியுவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் செயல்படுத்துவதை ஒப்புக்கொண்டு இதில் நாடுகள் கையெழுத்திட்டாலும், அவற்றை நேர்மையாக கடைப்பிடிப்பார்களா என்பதும் சந்தேகத்துக்குரியது.
கடந்த பல ஆண்டுகளாக உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் காலநிலை மாற்ற மாநாடு என்பது, ஏழை நாடுகளை ஏமாற்றும் நாடகமாகவே கருதப்படுகிறது.