பாகிஸ்தானில் சமூக வலைதளங்களை இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மூடக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் டுவிட்டர், வட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் சேவைகளைத் தடைசெய்யுமாறு பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகாரசபைக்கு பணிக்கப்பட்டுள்ளது.
“சமூக வலைதளங்கள் (டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் டெலிகிராம்) நாடு முழுவதும் 2021 ஏப்ரல் 16 ஆம் திகதி 11.00 மணி முதல் 15.00 மணி வரை தடைசெய்யப்படும்” என தெரிவித்துள்ளது.
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதற்காக, சில சமூக வலைதள பயன்பாடுகள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று வியாழக்கிழமை, அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி உரிமதாரர்களால் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் (டி.எல்.பி) கட்சியின் ஒளிபரப்புக்களுக்கும் பாகிஸ்தான் இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அதிகாரசபை தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.