தென் அமெரிக்க நாடான பெருவில், அதிபர் டினா பொலுவார்டே பதவி விலகக் கோரி மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கடந்த (20.07.2023) அன்று பெரு அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ காஸ்டில்லோவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டினா பொலுவார்டே, எதிர்கட்சி ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினார்.
அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவை விடுவிக்கக்கோரியும், மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் முன்பே கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் தலைநகர் லிமாவில் திரண்டவர்கள், முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்தக் கோரி பேரணி சென்றனர். பேரணியை ஆயுதப்படை பொலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை பொலீசார் கலைத்தனர்
தீவிர இடதுசாரி கொள்கை கொண்ட முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவின் ஆதரவாளர்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலதுசாரி மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் மோதல் நீடிப்பதால் பெரு நாடு அமைதி குலைந்து காணப்படுகிறது.