மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, இலண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டது.
உலகத்தின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றான இண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நேற்று இரவு 11.23 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதுடன், விமான நிலையத்தில் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டது.
இதனையடுத்து, 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு கருதி அங்கிருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து காரணமாக விமான நிலையத்துக்கும், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 16 ஆயிரம் வீடுகளுக்கும் மின்விநியோகம் முற்றிலும் தடைப்பட்டதுடன், ஹீத்ரோ விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
விமான நிலையத்துக்கு மறுஅறிவிப்பு வரை பயணிகள் யாரும் வரவேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.