சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம், இந்திய மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய அக்கடிதத்தில், இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானில் நெருக்கடியை உருவாக்கும் என்று, பாகிஸ்தான் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்பட்ட நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நிலைப்பாட்டை எடுக்கும் வரை ஒப்பந்தத்தை முடக்க இந்தியா முடிவு செய்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்குப் பகுதி நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீரை இந்தியாவும், மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம்.
ஆனால், பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது படிப்படியாக முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று இந்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், நதி நீர் ஒப்பந்தம் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்தியா தெரிவித்தமையைத் தொடர்ந்தே, குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.