புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ‘கொலிஜியம் குழு’வின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 6 நீதித்துறை அதிகாரிகள், 10 வழக்கறிஞர்களை மும்பை, குஜராத், ஒடிசா மற்றும் பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்கும்படி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி, நீதித்துறையில் அதிகாரிகளாக பணியாற்றும் ஏ.எல். பனசாரே, எஸ்.சி மோர், யு.எஸ்.ஜோஷி பால்கே, பி.பி. தேஷ்பாண்டே ஆகியோரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களான ஆதித்ய குமார், மிருகன்கா சேகர் சகோ, நீதித்துறை அதிகாரிகளான ராதா கிருஷ்ண பட்நாயக், சசிகாந்த் மிஸ்ரா ஆகியோரை ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும் நியமிக்கும்படி கூறப்பட்டுள்ளது.
மேலும், வழக்கறிஞர்கள் மவுன மனீஷ்பட், சமீர் தேவ், ஹேமந்த் பிரச்சாக், சந்தீப் என் பட், அனிருத்தா பிரத்யும்ன மாயே, நிடால் ரேஷ்மிகாந்த், நிஷா தாகூர் ஆகியோரை குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் சந்தீப் மவுகிலை நீதிபதியாக நியமிக்கும்படியும்பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.