தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வருகைதருவோரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நாளை (10) முதல் ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் இருந்து நாளை அதிகாலை நாட்டுக்கு வருகைதரும் விமானத்தில் உள்ள பயணிகளிடமிருந்து இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்கி அவர்களை விசேட பஸ்ஸினூடாக மட்டக்களப்பு, Batticaloa Campus மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த பயணிகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைதருவோர் 14 நாட்கள் வீட்டில் தங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சுமார் 3900 பேர் விசேட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நிலவும் இந்த காலப்பகுதியில் குழுவாகவோ அல்லது தனியாகவோ வௌிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவுக்கு தம்பதிவ யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிக குழுக்களை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மறு அறிவித்தல் வரை இந்தத் தீர்மானம் அமுலில் காணப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுமிடத்து, ஏனைய நாடுகளில் போன்று நகரங்களை மூடவேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.