யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவாடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
கொடிகாமம், சாவகச்சேரி, சுன்னாகம் பகுதிகளில் அண்மைய நாட்களில் இரவு வேளைகளில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிபர்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட மூவரே யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 பவுண் திருடப்பட் நகைகள் மற்றும் திருடப்பட்ட 20 பவுண் நகைகளுக்கான அடைவு சீட்டுக்கள் மற்றும் அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கணவன்-மனைவி மற்றும் அவர்களோடு திருட்டில் ஈடுபட்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய நாட்களில் வீடுகளில் தனித்திருக்கும் முதியவர்களை இலக்கு வைத்து குறித்த குழுவானது இரவு வேளைகளில் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி வயோதிபர்களை கடுமையாக தாக்கிய நகை, பண கொள்ளையில் ஈடுபட்டிருந்தது.
யாழ் மாவட்டத்தின் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு நீதவானிடம் முற்படுத்தப்படவுள்ளார்கள்.