MCC ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை இரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய எம்சிசி பணிப்பாளர் குழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வௌிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய 5 வருட திட்டத்தின் கீழ் இந்நாட்டின் சில துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக குறித்த தொகையை வழங்க அமெரிக்கா தீர்மானித்திருந்தது.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக எம்.சி.சிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
எனினும் கடந்த தேர்தலில் பெற்றுக்கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய மறுஆய்வு இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருக்க அரசாங்கம் முடிவு செய்த நிலையில், இது தொடர்பில் ஜனாதிபதியால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.