செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளரது சுதந்திரம் அல்ல!

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளரது சுதந்திரம் அல்ல!

5 minutes read

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் தான் நினைக்கும் விதத்தில் நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது குறித்தும் எச்சரித்துள்ளார்.

வலப்பனையில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊடக சுதந்திரம் குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல ஊடக சுதந்திரம். அது ஒரு மாஃபியா. ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு முயல்வதாக இருந்தால் அது ஒரு மாஃபியா. அதுவே இடம்பெறுகின்றது.

நாட்டில் அரசர்கள் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தார்கள். இங்கு மாஃபியாவே இடம்பெறுகின்றது. மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது. அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நான் நாட்டை நிர்வகித்துள்ளேன்.

எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும், அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன்.

அந்த ஊடகம் மாத்திரம் அல்ல தேசிய சிந்தனையில் உள்ள ஊடகங்களிலும் சிலர் கும்புக் மரங்களை வெட்டியதாக பொய்யான தகவல்களை வௌியிட்டிருந்தனர். யார் என்று நான் தேடிப் பார்த்தேன். அந்த ஊடகமே யுத்த காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்டது. அவர்களே தற்போது நுழைந்து இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்ட குழுவினரே மீண்டும் எழுந்துள்ளனர் என்றார்.

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல என்றும் சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென்ற தேவை இருந்தபோதும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தான் ஜனாதிபதி என்ற வகையில் ஊடகத் துறைக்கு எவ்வித அழுத்தங்களையும் செய்யவில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பல்வேறு குழுக்கள் மற்றும் ஆட்களின் தேவை யின் பேரில் பிழையான ஊடக பயன்பாட்டில் ஈடுபட்டு நாட்டையும் மக்களையும் மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முயற்சித்தால் அத்தகையவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்நிற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடக குழுவொன்று ஊடக நிறுவனங்களுக்குள் நுழைந்து தேசியத்திற்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான யோம்புவெல்தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ 15வது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அதிகாரிகளின் பொறுப்பு மக்களின் வாழ்க்கைக்கான வழிகளை செய்து கொடுப்பதாகும். ஒருபோதும் அவர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கக்கூடாது. மக்கள் வாழ்க்கை நிலைமைகளை பாதிக்கும் வகையிலான எவ்வித செயற்பாடுகளையும் அரச அதிகாரிகளிடம் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நான் ஒருபோதும் சுற்றாடலுக்கு அழிவை ஏற்படுத்தவில்லை. நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப் பகுதி முதல் சுற்றாடல் பாதுகாப்பிற்காக எவருமே செய்யாத பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். சுதந்திர சதுக்கம் கூட அன்று குப்பை மேடாக காணப்பட்டது. அந்த நிலைமையை இல்லாமல் செய்து கொழும்பு நகரத்தை பசுமை பூங்காவாக மாற்றினேன். சுற்றாடலுக்காக எதையுமே செய்யாதவர்கள் என்னை நோக்கி விரல் நீட்டுவது கவலைக்குரியதாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் இருந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஹந்தானையில் 30 ஏக்கர் காணியை தனது மகளுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்திருந்தால் இன்று அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து அழுது புலம்ப வேண்டி இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2015 – 2019 காலப் பகுதியில் குருணாகலை மாவட்டத்தில் 77 ஏக்கர் வனப் பகுதியும் புத்தளத்தில் 258 ஏக்கரும் மொனராகலையில் 100 ஏக்கரும் அனுராதபுரத்தில் 224 ஏக்கரும் உட்பட மைலேவ, மாத்தளை, லக்கலை, ரிதிகம, வெலிகன்ன உள்ளிட்ட பல பகுதிகளில் காடழிப்பு இடம்பெற்றுள்ளது. அத்தகையவர்கள் இன்று அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டுவது கேலிக்குரியதாகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

வறுமையை ஒழித்து கிராமிய மக்களை பொருாளதார ரீதியாக முன்னேற்றவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும். 75 வீதமாக உள்ள கிராமிய மக்களில் 35 வீதமானோர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி கிராமிய மக்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 35,000 பேருக்கு தற்போது தொழில்கள் வழங்கபபட்டுள்ளன. ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை வழங்கும் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மேலும் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதற்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்யும்போது சரியான ஆட்களை இனங்காண்பது கிராமிய அரச அதிகாரிகளினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். பயிற்றப்பட்ட ஊழியர்கள் இல்லாதிருப்பது நாட்டின் அபிவிருத்தித்திட்டங்கள் தாமதமடைவதற்கு காரணமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகல் மற்றும் காலி மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுவதற்காக நில்தண்டாஹின்ன பொது மைதானத்திலிருந்து யோம்புவெல்தென்னவிற்கு செல்லும் வழியில் திரண்டு இருந்த மக்கள் ஜனாதிபதியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

மக்களின் பிரச்சினைகள் குறித்து அதன்போது ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், கலகன்வத்த நவோதய பாடசாலை மாணவர்களுடன் புகைப்படத்திற்கும் தோற்றினார்.

உள்நாட்டில் சொசேஜஸ் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஒருவர் ஜனாதிபதிக்கு அதனை அறிமுகப்படுத்தியதுடன், தான் அந்த கருத்தை வியத்மக மாநாடொன்றின்போது பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டு, அதன்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ஜனாதிபதிக்கு காட்டினார்.

நீண்ட காலமாக வன விலங்குகளினால் தமது பயிர்களுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு மக்கள் ஜனாதிபதயிடம் கேட்டுக்கொண்டனர்.

மொபிடெல் நிறுவனம் வித்தியாபதீப இரண்டாம் நிலை பாடசாலைக்கும் சிதுஹத் மகா வித்தியாலயத்திற்கும் அன்பளிப்பு செய்த இணைய வசதியுடன் கூடிய மடிக் கணனியையும் டயலொக் நிறுவனம் தென்னபோதி ஆரம்ப பாடசாலைக்கு அன்பளிப்பு செய்த தொலைக்காட்சியையும் ஜனாதிபதி பாடசாலை அதிபர்களிடம் கையளித்தார்.

உரிமை இன்றி இதுவரை அரச காணிகளை பயன்படுத்தி வந்த குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான 5 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை அவர் வழங்கி வைத்தார்.

பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை வீதி போக்குவரத்து கஷ்டங்களாகும். இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. பிரதேசத்தில் பிரதான மற்றும் சிறியளவிலான 15 பாலங்களை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வலப்பனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

மடுல்ல இரண்டாம் நிலை பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கிராமிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒன்று வீதம் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யவும் பணிப்புரை வழங்கப்பட்டது.

காட்டு யானைகள் பிரச்சினைக்கு தீர்வாக பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து யானை வேலிகளையும் புனரமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பைனஸ், டேபன்டைன் சுற்றாடலுக்கு பாதிப்பானதாகும் என மக்கள் சுட்டிக்காட்டினர். அவற்றை நீக்கி தேசிய வனச் செய்கையை மேம்படுத்துமாறு ஜனாதிபதி சுற்றாடல் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

உலகில் சுவையான கோப்பி வகைகளில் நான்காவது இடத்தில் கொப்பிரியா, எரபிக்கா, லக்பெரகும் உள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்கு பொருத்தமான சூழலும் காலநிலையும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளது. அந்த கோப்பி செய்கையை மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

வலப்பனை, பொகவந்தலாவ, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட, தெரிபெஹ பிரதேச மற்றும் கிராமிய வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டத்தின் மருத்துவர்கள், தாதிகள் மற்றும் சிற்றூழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இராணுவ முகாம் ஒன்றை வலப்பனை பிரதேசத்தில் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More