உலக சாரணர் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்யும் “உலகளாவிய சாரணர் கலாசார ஜம்போரி” சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இரவு காணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.
“கலாசார ரீதியாக ஒரு சாரணர் உலகம்” (Culturally One Scout World) எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த “உலகளாவிய சாரணர் கலாசார ஜம்போரி” ஜுலை மாதம் 16, 17 மற்றும் 18 தினங்களில் மெய்நிகர் (Virtual) தொழில்நுட்பம் ஊடாக இடம்பெறும்.
இலங்கை சாரணர் சங்கத்தின் ஆதரவாளர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக இந்த ஜம்போரியை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உலகில் சாரணர் இயக்கம் காணப்படும் 172 நாடுகளில் 110 நாடுகள் இதுவரை இந்த ஜம்போரிக்காக பதிவுசெய்துள்ளதுடன், அந்தந்த நாடுகளின் தனித்துவமான கலாசார விழுமியங்களின் கூறுகள் (உணவு, உடை, கலாசாரம் மற்றும் நடனம்) இதில் உள்ளடக்கப்படும்.
“உலகளாவிய சாரணர் கலாசார ஜம்போரி” சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வில், இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமை சாரணர் ஆணையாளர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், பிரதி தலைமை ஆணையாளர் சட்டத்தரணி ஜனபிரித் பெர்னாண்டோ, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பிரபாத் குலரத்ன மற்றும் தலைமையக ஆணையாளர் வைத்தியர் அசங்க எரியாவ ஆகியோர் கலந்து கொண்டனர்.