செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹிஷாலியின் 2ஆவது பிரேத பரிசோதனை 9 மணிநேரமாக இடம்பெற்றது.

ஹிஷாலியின் 2ஆவது பிரேத பரிசோதனை 9 மணிநேரமாக இடம்பெற்றது.

1 minutes read

உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் இரண்டாவது பிரேத பரிசோதனை சனிக்கிழமை பேராதனை போதனா வைத்தியசாலையில் 9 மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது. பரிசோதனையின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட சடலத்தின் உடற்பாக மாதிரிகள் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுப்பாய்வு அறிக்கையும் கிடைக்கப் பெற்ற பின்னர் முழுமையான இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிரிழந்த சிறுமியின் இரண்டாவது பிரேத பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நீதிமன்ற மருத்துவ அறிவியல் தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா , கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நீதிமன்ற மருத்துவ அறிவியல் பிரிவின் பிரதானி சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சமீர குணவர்தன ,பேராதனை போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற மருத்துவ அறிவியல் தொடர்பான விசேட நீதிமன்ற வைத்திய நிபுணர் பிரபாத் சேனசிங்க ஆகியோர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டது.

இக்குழுவின் முன்னிலையில் சிறுமியின் இரண்டாவது பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. காலை 8.30 க்கு இப் பிரேத பரிசோதனைகள் ஆரம்பமாகி மாலை 5.15 வரையான 9 மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சடலம் சி.ரி.ஸ்கேன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

சடலத்தில் காணப்படுகின்ற உட்காயம் மற்றும் எலும்பு முறிவுகள் என்பன தொடர்பில் இனங்காண்பதற்காக இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரேத பரிசோதனையின் போது , சடலத்தின் சில உடற்பாகங்களின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

இந்த மாதிரிகள் இரசாயன பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வின் முடிவுகளும் கிடைக்கப் பெற்ற பின்னர் இது தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்தோடு சிறுமியின் சடலத்தை முழுமையான அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும் வரை பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தொடர் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதன் மூலம் கிடைக்கப் பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More