இலங்கையில் அமெரிக்க டொலர்களின் கையிருப்பு 937 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்கு பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின்படி, நிதியுதவி வழங்கியதன் மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வலுவடைந்துள்ளது. இதன் மூலம், இலங்கையினால் பெறப்பட்ட 787 மில்லியன் அமெரிக்க டொலர்களும், பங்களாதேஷ் மத்திய வங்கியுடனான பணப் பரிமாற்ற ஒப்பந்தங்களின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு இணங்க பெறப்பட்ட 150 மில்லியன் அமெரிக்க டொலர்களும் தற்போது இலங்கை பொருளாதாரத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தில் தற்போதுள்ள ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப 650 பில்லியன் அமெரிக்க டொலர்களை அதன் உறுப்பு நாடுகளுக்கு வழங்க முடிவு செய்திருந்தது. இதன்மூலம் இலங்கை 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற தகுதி பெற்றிருந்தது. இதில், இலங்கை தற்போதுவரை 787 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டதையடுத்து, சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன் அல்ல என்றும் இதற்காக எந்த நிபந்தனைகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இதற்கு முன்னதாக 2009, 1979, – 81 மற்றும் 1970, – 72 ஆம் ஆண்டுகளில் அதன் உறுப்பு நாடுகளுக்கு SDR இருப்புக்களை வழங்கியது.