நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருளுக்கான 42 மில்லியன் டொலர் பணம் இதுவரை திரட்டப்படவில்லை எனவும் நாளைய தினம்(18) அந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.d.R.ஒல்கா தெரிவித்துள்ளார்.
தலா 22,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் விமான எரிபொருளை ஏற்றிய கப்பல் நாட்டை நெருங்கி 05 நாட்களாகின்றன.
எனினும், கொடுப்பனவைச் செலுத்த முடியாமையினால் எரிபொருளை கப்பலிலிருந்து இறக்குவதற்கு முடியாமற்போயுள்ளது.
இதனிடையே, நாட்டின் தற்போதைய நாளாந்த எரிபொருள் கேள்வி 9,000 மெட்ரிக் தொன் வரை அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்கின்றதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
தற்போது பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 7,000 தொன் எரிபொருளை விநியோகிப்பதாக கூட்டுத்தாபனத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.