பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி என்னிடம் ஒருபோதும் குறிப்பிடவுமில்லை, குறிப்பிட போவதுமில்லை என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டை நெருக்கடியான நிலையில் வைத்து விட்டு பதவி விலகுவதற்காக மக்கள் எமக்கு ஆணையை வழங்கவில்லை. எம்மீதான நம்பிக்கை மக்களுக்கு உண்டு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதேச சபை உறுப்பினர்கள், நகராதிபரிகள் உட்பட மாவட்ட தலைவர்களுடன் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அனைவரும் நன்கு அறிவார்கள்.பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது.வரலாற்று ரீதியில் இருந்து தாக்கம் செலுத்திய பல்வேறு காரணிகளினால் தற்போது இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டு மக்களை மீட்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.ஆகவே அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த அரசாங்கத்தையே பொறுப்பேற்றோம். பொருளாதாரம் உட்பட தேசிய பாதுகாப்பின் மீது நாட்டு மக்கள் அப்போது நம்பிக்கை கொள்ளவில்லை.
அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் இல்லாத,குண்டு வெடிக்காத நாட்டையே மக்கள் கோரினார்கள்.மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். கொவிட் தாக்கத்தினை சிறந்த முறையில் எதிர்க்கொண்டுள்ளோம்.சவால்களுக்கு முகம் கொடுப்பது எமக்கு புதிதல்ல,அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புடன் பல சவால்களை வெற்றிக்கொண்டுள்ளேன்.கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்துள்ளமை சிறந்த வெற்றியாகும்.
சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தி;ன் யோசனைகளை செயற்படுத்தி முன்னேற்றமடைய வேண்டும். பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் என்னிடம் குறிப்பிடவில்லை.குறிப்பிடவும் மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.