இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது வாக்குகள் மூன்றாக பிளவடையும். இதுவரை மூவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.சமூக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிடின் முழு நாடும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு தீர்மானமிக்க நிலையை தற்போது எதிர்கொண்டுள்ளது.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கபோவதில்லை.
பாராளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கு இதுவரை மூவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை நடத்தி பொருளாதார மீட்சிக்கான தனது திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிடின் பாரதூரமான எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.ஜனாதிபதி மாளிகை,ஜனாதிபதி செயலகம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகுகின்றன.
பொருளாதார மீட்சிக்கான நாம் முன்வைக்கும் திட்டங்களை செயற்படுத்தும் தரப்பினருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்.குறுகிய அரசியல் நோக்கங்களை தவிர்த்து சகல அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும்.
225 பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டாம் என்றால் பொதுத்தேர்தலுக்கு செல்வதை தவிர்த்து பிறிதொரு மாற்று நடவடிக்கை ஏதும் கிடையாது.அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.