கொழும்பில் இனந்தெரியாத குழுவால் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டுக் காயங்களுடன் விடுவிக்கப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் (வயது 52) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொரளை பொது மயானத்தில் வாகனத்துக்குள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய சேர்க்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வர்த்தகரைக் கடத்தி, பொரளை மயானத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்திருந்ததாகப் பொரளைப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
.
நபர் ஒருவருக்குப் பல கோடி ரூபா கடன் தொகை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை சந்திப்பதற்காக, கறுவாத்தோட்டம் – ப்ளவர் வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்றுப் பிற்பகல் மனைவியிடம் விடயம் தொடர்பில் தகவல் தெரிவித்துவிட்டு காரில் சென்றுள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது.
சிறிது நேரத்தில் அவரது மனைவி அவருக்குத் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டார் எனவும், ஆனால் அவரது தொலைபேசி இயங்காமல் இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர் பொரளை மயானத்தில் இருப்பது தொடர்பில் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு ஜி.பி.எஸ். தொழில்நுட்ப சமிக்ஞை கிடைத்துள்ளது.
இது தொடர்பில் விரைந்து செயற்பட்ட அவரது மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி பொரளை மயானத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன்போது குறித்த அதிகாரி அங்கு சென்று தேடிப் பார்த்தபோது தினேஷ் ஷாப்டர் பயணித்த காரின் சாரதியின் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் காருக்குள் இருந்துள்ளார். மேலும், தினேஷ் ஷாப்டரும் அங்கு காயங்களுடன் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளார் என்று குறித்த நிறைவேற்று அதிகாரி மனைவிக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் பொரளைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்கள். இந்நிலையில் தினேஷ் ஷாப்டர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் பொலிஸாரும், குற்றப் புலனாய்வுபி பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், சில விசேட பொலிஸ் குழுக்களும் அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.