செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுமந்திரன் தெரிவித்த கருத்து தவறு! – மாவை கூறுகின்றார்

சுமந்திரன் தெரிவித்த கருத்து தவறு! – மாவை கூறுகின்றார்

2 minutes read

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளுடன் இணைந்தே போட்டியிடுவது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தவறானது என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதுள்ள நிலையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் வெளியில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தக் கருத்துத் தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடம் கேட்டபோது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போதுள்ள கட்சிகளைத் (தமிழரசு, ரெலோ, புளொட்) வேறு கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டுக்குச் செல்வதில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு முடிவு எதுவும் எடுக்கவில்லை.

அந்தக் கூட்டத்தில் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது, இது தொடர்பில் மற்றக் கட்சிகளுடன் எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்து கருத்து பரிமாற்றங்கள் மாத்திரமே இடம்பெற்றன.

‘சூம்’ செயலி ஊடாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பங்கேற்றுவிட்டு இடைநடுவில் சென்றுவிட்டார்.

தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்தான் முடிவு எடுப்போம்.

தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியாகத் தனித்துப் போட்டியிடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே போட்டியிடும். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளைத் (தமிழரசு, ரெலோ, புளொட்) தவிர வெளியில் உள்ள ஏனைய மூன்று கட்சிகளையும் (சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., என்.ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி) இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பதா என்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்தான் முடிவு எடுப்போம்.

இந்த விவகாரம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளார்கள். அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இந்த விவகாரம் தொடர்பில் என்னுடன் வந்து பேசியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனின் வீட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பின் போதும் தேர்தல் உடன்பாடு தொடர்பில் பேசியுள்ளோம். எனினும், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்தான் தேர்தல் உடன்பாடு தொடர்பில் முடிவு எடுப்போம் என்று மேற்படி மூன்று சந்திப்புக்களிலும் நான் திட்டவட்டமாகத் தெரிவித்தேன். இந்த விவகாரத்தை நாம் மிகவும் பக்குவமாகக் கையாள வேண்டும். அவசரப்பட்டு கருத்துக்களை எவரும் வெளியிடக்கூடாது” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More