செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வலுவான தீர்வையே ஏற்போம்! – ரணிலிடம் எடுத்துரைப்பேன் என்கிறார் சம்பந்தன்

வலுவான தீர்வையே ஏற்போம்! – ரணிலிடம் எடுத்துரைப்பேன் என்கிறார் சம்பந்தன்

2 minutes read

“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை விரைந்து காண வேண்டும். அது வலுவான – நிரந்தர தீர்வாக இருக்க இருக்க வேண்டும். இல்லையேல் அந்தத் தீர்வை ஏற்கமாட்டோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாளை (வியாழக்கிழமை) சந்திக்கும் போது வலியுறுத்தவுள்ளேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ‘வணக்கம் இலண்டன்’ இணையத்தளத்திடம் தெரிவித்தார்.

“தீர்வுக்கான பேச்சில் எம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவோம். நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். அவர்களின் விருப்பங்களை – கோரிக்கைகளை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும். தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகளையே ஜனாதிபதியிடம் கடந்த சந்திப்புகளில் முன்வைத்துள்ளோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை” – என்றும் சம்பந்தன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

“தமிழர் தீர்வுக்கான பயணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாளை வியாழக்கிழமை மாலை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாகத் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சு எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்தப் பேச்சு தொடர்பான முன்னாயத்த நடவடிக்கையாகவே இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

சர்வகட்சி சந்திப்பின் பின்னர் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி தமிழ்த் தேசியத் தரப்பு கட்சிகளை ஜனாதிபதி சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கான அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோவுக்கும் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கும் சுமந்திரன் எம். பியே விடுத்தார்.

போதிய அவகாசம் இல்லாத அதேசமயம், தமக்கு ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படாதது குறித்து விக்னேஸ்வரன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தநிலையிலேயே நாளைய சந்திப்புக்குத் தமிழ்த் தேசிய கட்சிகளின் சகல தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நேரடியாக அழைப்பை விடுத்துள்ளார்.

நாளைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்குபற்றுவர். சி.வி. விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளமையால் இந்தச் சந்திப்பில் பங்கேற்கமாட்டார் என்று அறியமுடிகின்றது.

இதேவேளை, நாளைய சந்திப்பில் அரச தரப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்பர் என்று கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More