உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றத்தால் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறித்த மனு தொடர்பில் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
எழுத்தாணை மனுவில் மனுதாரர்கள் தொடர்பில் உரிய விடயங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
மனுதாரர் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளரா என்பது தொடர்பிலும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, குறித்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரில் புள்ளே மன்றில் ஆஜராகி விடயங்களைச் சமர்ப்பித்தார்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது என நிதி அமைச்சின் செயலாளரால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக்கடதாசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரில் புள்ளே மன்றுக்கு அறிவித்தார்.
இந்நிலையில், குறித்த எழுத்தாணை மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.