உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்குத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கான தடை ஏதும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை.
சட்டதிட்டங்களின்படி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த அறிவித்தல் விடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்த நிலையில் அதனை நடத்துவதற்கான எழுத்தாணையை வழங்க வேண்டிய அவசியம் ஏதும் ஏற்படவில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் தனது அவதானிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இன்று இந்த முடிவை அறிவித்துள்ளது. அத்துடன் இந்த மனுக்களைத் தொடர்ந்து விசாரிப்பதில்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே உயர் நீதிமன்றம் தனது முடிவை அறிவித்துள்ளது.
இந்த மனுவில் சட்டத்தரணி சுனில் வட்டகல, எரங்க குணசேகர மற்றும் வி.சந்திரசேகரன் ஆகியோர் இடைமனுதாரர்களாகச் சேர்ந்திருந்தனர்.