செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்

ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்

1 minutes read

பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற பஸ்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் மற்றும் கிழவன்குளம் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பாடசாலை வரவும் மீள வீடு திரும்பவும் பஸ்கள் ஏற்றாமையால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்புக்களிடமும் முறையிட்டும் வீதியை மறித்து போராட்டம் செய்தும் இதுவரை சரியான தீர்வுகள் எட்டப்படாத நிலை காணப்படுகிறது.

இதன் பின்னணியில் பாடசாலை மாணவர்கள் பருவகால சிட்டைகளை பெற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள்  ஏற்றாமல் செல்லும் நிலை தொடர்வதால் மாணவர்கள் பாடசாலை செல்லவும் மீண்டும் வீடு திரும்பவும் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (13) பாடசாலையில் பரீட்சை நடைபெற்ற நிலையில் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில் வீதியில் அந்தரித்த நிலையில் மாங்குளம் பொலிஸாருக்கு ஊடகவியலாளர் ஊடாக இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு போக்குவரத்து பொலிஸ் ஊழியர் ஒருவர் வரவழைக்கப்பட்டு காலை 8.12 மணிக்கு வீதியில் வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனை நோக்கி சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மாணவர்கள் ஏற்றி விடப்பட்டனர்.

இதன்போது பொலிஸாருடன் குறித்த சாரதி தர்க்கப்பட்டதோடு குறிப்பிட்ட இடத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளருடனும் தர்க்கப்பட்டு அச்சுறுத்தி சென்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் திங்கட்கிழமை (13) மற்றும் செவ்வாய்க்கிழமை (14) ஆகிய தினங்களில் செய்திகளாக வெளிவந்திருந்தது.

இதன் பின்னணியில் புதன்கிழமை (15) இரவு 20.47 மணிக்கு  ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு தொடர்பை ஏற்படுத்திய மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் ஊடகவியலாளரை  கெட்ட வார்த்தைகளால் திட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனால்  நேற்று (16)மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமது சேவைகளை சரியாக செய்யாது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோரி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு உரிய தரப்புக்கள் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More